வயநாட்டிற்கு பதிலாக தென்மாநிலங்களில் வேறு ஏதேனும் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டிருக்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான ஆனி ராஜா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதேபோன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும் அதே தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், ஒரே கூட்டணியிலிருந்து இரு வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, பொதுமக்கள் மத்தியில் தற்போது பொதுவான கேள்வி ஒன்று நிலவுகிறது. வயநாடு தொகுதியில் ஆனி ராஜாவுக்கு எதிரான ராகுல் காந்தி ஏன் போட்டியிட வேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி என்ன சொல்ல விரும்புகிறது? மிகக் குறுகிய காலத்தில் வயநாடு தொகுதி குறித்த முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. ராகுல் காந்தியை தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கலாம். மக்கள் இது குறித்து ஏன் கேள்வி எழுப்புகிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.