
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் மைசூரு கேசரே பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியுள்ளது.
அதற்குப் பதிலாக, விஜயநகர் பகுதியில் கூடுதல் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023 பேரவைத் தேர்தலில் மனைவியின் இந்த சொத்து குறித்த தகவல்களை சித்தராமையா வெளியிடவில்லை என்று சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆபிரஹாம் என்பவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஆளுநர் தலைமைச் செயலர் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் இதுகுறித்து விசாரிக்கக்கூறி அறிக்கையும் பெற்றார்.
அதனடிப்படையில் புகார் குறித்து விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதையடுத்து ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.
ஆனால், முதல்வர் சித்தராமையா தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
மேலும் இது கர்நாடக அரசைக் குறிவைக்கும் மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி என்றும் சித்தராமையா மீது வழக்குத் தொடர அனுமதி அளித்ததைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சி உங்களுடன் துணை நிற்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், சித்தராமையாவிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.