
காந்தி அல்லாத காங்கிரஸ் தலைவர்களுக்கு காங்கிரஸ் உரிய மரியாதையை கொடுத்ததில்லை என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் சீக்கியப் பிரதமரான மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கை அவரது நினைவிடம் அமையவுள்ள இடத்தில் நடத்தாமல் நிகம்போத் காட் பகுதியில் நடத்தி மத்திய அரசு அவரை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நாங்கள் கருத்து மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவர் மிகவும் மதிப்பிற்குரியவர். பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கிற்கு முழுமையான அரசு மரியாதையை வழங்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மட்டுமின்றி, முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மா ராவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் காங்கிரஸ் உரிய மரியாதையை வழங்கவில்லை. தற்போது பிரணாப் முகர்ஜியின் மகள், அவரது தந்தையின் மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் எதுவும் நடத்தவில்லை என்று கூறினார்.
உண்மையில், காந்தி குடும்பத்தினர் காந்தி அல்லாத காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒருபோதும் மரியாதை அளித்ததில்லை. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கும், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும் பாரத ரத்னா விருது கூட வழங்கவில்லை. காந்தி குடும்பம் இதுகுறித்து சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.