பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்.. விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்.. விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

புது தில்லி: நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படியும், அமைதியை நிலைநாட்டவும் விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிா்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனா். பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், வேளாண் வாகனங்களுடன் அங்கு முகாமிட்டுள்ளனா்.

இந்நிலையில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்வதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. விவசாயிகள் நலன் சாரா இந்த முன்மொழிவுகளை நிராகரிப்பதாக விவசாயிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதையொட்டி அறிவித்தபடி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் தில்லியை நோக்கி இன்று காலை மீண்டும் பேரணியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தில்லி நோக்கி பேரணியாக வந்துகொண்டிருக்கும் விவசாயிகளை ஆங்காங்கே தடுத்து நிறுத்தும் வகையில், தில்லியின் எல்லைப் பகுதிகளில் மூள் கம்பிகளைக் கொண்ட தடுப்புகள் (தடுப்புகள் மீது ஏற முடியாமல் தடுக்க), சிமெண்ட் பாறைகள் (சாலைகளில் வாகனங்கள் வர முடியாமல் தடுக்க), ஆணிப் படுக்கைகள் (வாகனங்கள் வந்தாலும் பங்சர் ஆக), அதையும் தாண்டி சாலைகளில் பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

தில்லிக்குள் விவசாயிகள் எந்த வகையிலும் நுழைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தில்லி காவல்துறை, பல்வேறு நவீன யுக்திகளைக் கையாண்டு தில்லி விவசாயிகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயிகளின் இந்தப் போராட்டம் ஏதேனும் பெரிய அசம்பாவிதமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக, அதீத தடுப்பு நடவடிக்கைகளை தில்லி காவல்துறை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வடமாநில எல்லைப் பகுதிகளான திக்ரி, சிங்கு பகுதிகளில் காவல்துறையினரும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com