விபத்தில் சிக்கியவருக்கு வேறு வகை ரத்தம் செலுத்தியதால் மரணம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், 23 வயது நபர், சாலை விபத்தில் சிக்கி, சவாய் மன் சிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு வேறு வகை ரத்தம் செலுத்தப்பட்டதால், அவர் மரணமடைந்தார்.
பந்திக்கு பகுதியைச் சேர்ந்த சச்சின் ஷர்மா, பிப்ரவரி 12ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அதிக ரத்தம் வெளியேறியதால், ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவரது ரத்த வகை அல்லாமல், வேறு ரத்த வகை ஏற்றப்பட்டுள்ளது.
அவரது ரத்த வகை ஓ என்ற போதிலும், மருத்துவர்களின் கவனக்குறைவால், அவருக்கு ஏபி வகை ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது குடும்பத்தினர் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். முதற்கட்ட விசாரணையில்தான், அவருக்கு வேறு வகை ரத்தம் செலுத்தப்பட்டதே கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பணியில் இருந்த மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக எந்த ஒரு குறிப்பையும் எழுதாமல் இருந்த மருத்துவர்கள் என நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேறுவகை ரத்தம் செலுத்தப்பட்டதால், அவரது உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் செயலிழக்கத் தொடங்கியதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.