அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து திடீரென தில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்காக 7 முறை சம்மன் அனுப்பினர். அந்த 7 சம்மன்களையும் அவர் புறக்கணித்தார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு அனுப்பப்பட்ட எட்டாவது சம்மனை ஏற்றுக்கொண்ட ஹேமந்த் சோரன் ஜன.20ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஏழு மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின்பு, 9வது முறையாக மீண்டும் அழைப்பாணை அனுப்பட்டதையடுத்து, அதிகமான பணிகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று ஹேமந்த் பதில் அனுப்பினார்.
ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஜனவரி 29 முதல் 31க்குள் ஏதேனும் ஒரு தேதி, நேரம் மற்றும் இடத்தினை தாங்களே குறிப்பிட்டு சொல்லுமாறு கூறி ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவசரமாக தில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தப் பயணமானது முன் திட்டமிடப்படாத ஒன்றாகும். இது அலுவல்ரீதியிலான பயணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஹேமந்த் சோரன் தில்லி சென்றதாக கூறப்படுகிறது.