இஸ்ரேலில் சில முகவர்களுடன் தொடர்பில் உள்ள, வெளிநாடுகளுக்கு மக்களை வேலைக்கு அனுப்புவதாக ஏமாற்றி வந்த 50 வயது மதிக்கத்தக்க நபரை தில்லி காவல்துறையினர் கைது செய்ததாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் ஷர்மா என்பவர் இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்புவதாக 39 வயது பெண் ஒருவரை மோசடி செய்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அஞ்சு சேத்ரி என்பவரிடம் விசாரணை செய்ததன் மூலம் இப்படி ஒரு ஏமாற்றுவேலை நடந்திருப்பதை காவலர்கள் கண்டறிந்தனர்.
போலி ஆவணங்களை அந்த பெண் வைத்திருந்ததும் அவரின் உண்மையான பெயர் ஹெடல்பென், குஜராத்தைச் சார்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அதே பெண்ணிடம் இன்னொரு பெயரில் ஆதார் கார்டு இருந்துள்ளது.
மார்ச் 31 தில்லியில் இருந்து டெல் அவிவ் அனுப்பப்பட்ட ஹெடல்பென் அங்கிருந்த மீண்டும் இஸ்ரேல் அதிகாரிகளால் இந்தியா அனுப்பப்பட்டுள்ளார்.
ஹெடல்பென் விசாரணையில் தான் ரமேஷ் ஷர்மா என்பவரிடம் இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்வதற்கு ரூ.6 லட்சம் பணம் கொடுத்ததாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய இன்னொரு முகவர் நந்தா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரமேஷ் தலைமறைவாக இருந்ததாகவும் டிசிபி தெரிவித்தார். பின்னர் ரமேஷும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.