மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர், எம்எல்ஏ வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைச்சர் சுஜித் போஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபாஸ் ராய் மற்றும் முன்னாள் நகராட்சித் தலைவர் சுபோத் சக்ரவர்த்தி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் லேக் டவுன் பகுதியில் உள்ள சுஜித் போஸின் இரண்டு வீடுகளில் இன்று அதிகாலை முதல் மத்திய படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பிபி கங்குலி தெருவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தபஸ் ராயின் வீடு மற்றும் சுபோத் சக்ரவர்த்தியின் வீட்டிலும் சோதனைகள் நடைபெறுகின்றன.
குடிமையியல் அமைப்புகளில் ஆட்சேர்ப்பு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த இந்த மூன்று தலைவர்களின் வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது