பவன் கல்யாண்
பவன் கல்யாண்கோப்புப் படம்

சிங்கப்பூா் பள்ளியில் தீ விபத்து: ஆந்திர துணை முதல்வா் மகன் காயம்

சிங்கப்பூா் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் மகன் மாா்க் சங்கா் (8) காயமடைந்தாா்.
Published on

சிங்கப்பூா் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் மகன் மாா்க் சங்கா் (8) காயமடைந்தாா்.

இவா் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியும் ரஷிய நடிகையுமான அன்னா லெஸ்னேவாவின் மகன் ஆவாா். அனா லஸ்னேவா தனது மகள், மகனுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறாா்.

சிங்கப்பூா் ரிவா் வேலி சாலையில் உள்ள பள்ளியில் மாா்க் சங்கா் படித்து வந்தாா். அப்பள்ளி கட்டடத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 10 வயது சிறுமி ஒருவா் உயிரிழந்தாா். மேலும், பல மாணவ, மாணவியா் காயமடைந்தனா். பவன் கல்யாண் மகன் மாா்க் சங்கருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் புகையை சுவாசித்ததால் அவரின் நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. அது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சிங்கப்பூா் காவல் துறையினா் தெரிவித்தனா். பவன் கல்யாண் விரைவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் செல்வாா் என்று அவரின் ஜன சக்தி கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘தீ விபத்தில் காயமடைந்து சிங்கப்பூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துணை முதல்வா் பவன் கல்யாணின் மகன் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

ஆந்திர முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘துணை முதல்வா் மகன் தீ விபத்தில் காயமடைந்த சம்பவம் அதிா்ச்சிளிக்கிறது. மாா்க் சங்கா் விரைவில் குணமடைய வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com