ஒரு மணி நேரம் பேசிய குடியரசுத் தலைவர்! - உரையின் முழு விவரம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்...
President Murmu Addressing in Parliament
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை.
Published on
Updated on
3 min read

பாரதம் என்பதுதான் நம் ஒரே அடையாளம், வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று(ஜன. 31) தொடங்கியது.

நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புவதாகவும் அனைவருக்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் குதிரைகள் பூட்டிய வண்டியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு உரையாற்றினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த குடியரசுத்தலைவர் அவரின் சாதனைகள் குறித்துப் பேசினார்.

பின்னர் மக்களவையில் அவர் பேசியது:

நமது அரசியலமைப்பை ஏற்று 75 ஆண்டுகள் ஆனதை இரு மாதங்களுக்கு முன் கொண்டாடினோம். அனைத்து இந்தியர்களின் சார்பாக, அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்புக் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் தலைவணங்குகிறேன்.

மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பழங்குடியின சமூகத்தின் 5 கோடி மக்களுக்காக பழங்குடியினர் கிராம மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2.25 கோடி சொத்துரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு உதவித்தொகையாக இந்த ஆட்சியில் ரூ. 41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்த அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. இன்று பெண்கள் போர் விமானங்களை இயக்குவது, காவல்துறையில் சேருவது, நாட்டில் பல்வேறு நிறுவனங்களை வழிநடத்துவது என பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தியாவின் மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று உலகளவில் இந்தியாவை பெருமைப்படுத்துகிறார்கள்.

மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மூலமாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் மருந்தகங்கள் மூலமாக 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். '2047ல் வளர்ந்த பாரதம்' என்ற நமது இலக்கு உலகைக் கவர்ந்துள்ளது.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மூலம் அரசு வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினரின் 'சொந்த வீடு' என்ற கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 அல்லது அதற்கு மேற்பட்டவயதுடைய 6 கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீடு வழங்கப்படும்.

புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகளவில் சிறந்து விளங்கச் செய்வதே அரசின் நோக்கம். செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா தனது பணியைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுகிறது.

இன்று நமது இளைஞர்கள், நிறுவனங்கள் முதல் விளையாட்டு, விண்வெளித் துறை வரை அனைத்துத் துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சைபர் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றங்கள், டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஆகியவை சமூக, நிதி மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கு கடுமையான சவால்களாக உள்ளன.

சிறு, குறு தொழில்களை மேம்படுத்தும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றுக்கான கடன் உத்தரவாதத் திட்டம், மின் வணிக ஏற்றுமதி மையங்கள் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் வணிகத்தை அதிகரித்துள்ளன.

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, அதற்காக அதிக முதலீடு செய்யப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள் 1,700 புதிய விமானங்கள் வாங்கவுள்ளதன் மூலமாக நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக முன்னேறி வருகிறது.

உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் விரைவில் இணைக்கப்படும்.

இந்தியாவின் மெட்ரோ ரயில் இணைப்பு இப்போது 1,000 கிலோமீட்டர் மைல்கல்லை கடந்துவிட்டது. உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ இணைப்பைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் இணைந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 8 வடகிழக்கு மாநிலங்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் சுகாதார மையங்கள்(ஆரோக்கிய மந்திர்)நிறுவப்பட்டுள்ளன.

புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, பல புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 30 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சூரிய ஒளி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது இந்த அரசு.

பாதுகாப்புத் துறையிலும் தன்னம்பிக்கை அடைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.

நாட்டில் 140 கோடி மக்களாக நாம் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே பாரதம்தான். பாரதம் என்பதுதான் நம் ஒரே அடையாளம்.

வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் கனவை அனைவரும் சேர்ந்து நனவாக்க வேண்டும்" என்று பேசினார்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.

பட்ஜெட் தாக்கல்

பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்கிறார்.

பின்னர் மத்திய பட்ஜெட்டை நாளை(சனிக்கிழமை) தாக்கல் செய்கிறாா். இது, அவா் தொடா்ந்து 8-ஆவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும்.

அதன்பின்னா் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.

கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா, பேரிடா் மேலாண்மை சட்டத் திருத்த மசோதா, எண்ணெய் வயல் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத் திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் மசோதா உள்பட 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com