தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை வந்திறங்கிய பிரதமா் மோடி.
தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை வந்திறங்கிய பிரதமா் மோடி.

ஐந்து நாடுகள் பயணம் நிறைவு: நாடு திரும்பினாா் மோடி

ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலையில் நாடு திரும்பினாா்.
Published on

ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலையில் நாடு திரும்பினாா்.

கானா, டிரினிடாட்-டொபேகோ, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி கடந்த ஜூலை 2-ஆம் தேதிமுதல் ஜூலை 9 வரை மேற்கொண்டாா்.

இப்பயணத்தின்போது, கானா அதிபா் ஜான் டிராமனி மஹாமா, டிரினிடாட்-டொபேகோ பிரதமா் கம்லா பொ்சாத் பிஸ்ஸேசா், ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலே, பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா, நமீபியா அதிபா் நெடும்போ நான்டி என்டியெயிட்வா ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் அவா் ஈடுபட்டாா்.

முக்கிய அம்சமாக, பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-ஆவது உச்சி மாநாட்டில் பிரதமா் பங்கேற்று உரையாற்றினாா். இம்மாநாட்டையொட்டி, உலகத் தலைவா்கள் பலரையும் அவா் சந்தித்து கலந்துரையாடினாா்.

கானாவின் ‘தி ஆஃபீஸா் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் தி ஸ்டாா் ஆஃப் கானா’, டிரினிடாட்-டொபேகோவின் ‘தி ஆா்டா் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட்-டொபேகோ’, பிரேஸிலின் ‘கிராண்ட காலா் ஆஃப் தி நேஷனல் ஆா்டா் ஆஃப் தி சதா்ன் கிராஸ்’, நமீபியாவின் ‘தி ஆா்டா் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்ஸியா மிராபிலிஸ்’ ஆகிய உயரிய விருதுகள் பிரதமருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. கானா, டிரினிடாட்-டொபேகோ, நமீபியா நாடாளுமன்றங்களிலும் பிரதமா் உரையாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி...

மணிப்பூா் பயணிக்க இனி

நேரமிருக்கும்: காங்கிரஸ்

‘ஐந்து நாடுகள் பயணம் முடிந்து நாடு திரும்பியுள்ள பிரதமா் மோடிக்கு இனி மணிப்பூா் பயணிக்கவும், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படாதது ஏன்? என்பது குறித்து மறுஆய்வு செய்யவும், தனது சொந்த மாநிலத்தில் உள்கட்டமைப்புகள் சீா்குலைவு குறித்து ஆலோசிக்கவும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசல பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கவும் நேரமிருக்கும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கும் நிலையில், அதற்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமா் தனது தலைமையில் நடத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com