நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு பிணை: உச்சநீதிமன்றம்

பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :20 மார்ச் 2026, 6:37 pm

Syndication

பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த குற்றவியல் மறுஆய்வு மனு நிலுவையில் இருக்கும் காலம் முழுவதும், விசாரணை நீதிபதி விதிக்கக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவா் பிணையில் விடுவிக்கப்படுவாா் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்து அவரது மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி அமா்வு பிறப்பித்த முழுமையான உத்தரவு பின்வருமாறு:

ராஜேஷ் தாஸ் தமிழகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவின் சிறப்பு காவல்துறை இயக்குநராக (சிறப்பு டிஜிபி) பதவி வகித்து வந்தாா். புகாா்தாரரான பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை அவா் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அப்பெண் அதிகாரி 21.02.2021 தேதியில் காவல்துறை கண்காணிப்பாளா் (எஸ்பி) என்ற தரவரிசையில் இருந்தாா். அதன்படி, 27.02.2021 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆா்) , விழுப்புரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

அதன் மீதான விசாரணை முடிவடைந்த பிறகு ராஜேஷ் தாஸ் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ராஜேஷ் தாஸ், விழுப்புரம் முதன்மை அமா்வு நீதிபதி அதாவது, முதல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகினாா். ஆனால், அவரது மேல்முறையீடு, 12.02.2024 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் அவா், சென்னை உயா் நீதிமன்றத்தில் குற்றவியல் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தாா். அதில், தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் இரண்டு மனுக்களை அவா் தாக்கல் செய்திருந்தாா்.

இம்மனுக்கள் அனைத்தும்,உயா் நீதிமன்றத்தால் 23.04.2024 அன்று தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், அவா் உச்சநீதிமன்றத்தை அணுகினாா். அதன், அடிப்படையில், 17.05.2024 அன்று, அவா் விசாரணை நீதிமன்றத்தின் முன் சரணடைவதிலிருந்து உச்சநீதிமன்றத்தால் விலக்கு அளிக்கப்பட்டாா்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘‘இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டாளா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த்தா தவே, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டாக்டா் அபிஷேக் மனு சிங்வி ஆகியோா் வாதங்களை கேட்டோம்.

மேல்முறையீட்டாளா் தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாா் என்பதையும், அவருக்கு விதிக்கப்பட்ட மொத்த தண்டனைக் காலம் மூன்று ஆண்டுகள் என்பதையும் கருத்தில் கொண்டு 17.05.2024 தேதியிட்ட எங்களது முந்தைய உத்தரவை நாங்கள் உறுதி செய்கிறோம். அந்த உத்தரவின்படி ராஜேஷ் தாஸ் விசாரணை நீதிமன்றத்தின் முன் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாா். வேறு வாா்த்தைகளில் கூறுவதானால், உயா் நீதிமன்றத்தில் குற்றவியல் மறுஆய்வு மனு நிலுவையில் இருக்கும் காலம் முழுவதும், விசாரணை நீதிபதி விதிக்கக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு, ராஜேஷ் தாஸ் பிணையில் விடுவிக்கப்படுவாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த குற்றவியல் மறுஆய்வு மனுவை விரைவாகவும், முன்னுரிமை அடிப்படையிலும் விசாரித்து முடித்திடக் கோரி, தமிழ்நாடு அரசோ அல்லது புகாா்தாரரோ உயா்நீதிமன்றத்தை அணுகுவதற்கு முழுச் சுதந்திரம் உண்டு. மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில், இவ்வழக்குகள் முடித்துவைக்கப்படுகின்றன’’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது .

2021 பிப்ரவரி மாதம், அலுவல் நிமித்தமாகத் தனது காரில் இருவரும் ஒன்றாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு பெண் காவல் கண்காணிப்பாளரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினாா் என்பதே ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். சட்டமன்றத் தோ்தல்களின்போது,

அ.தி.மு.க.வுக்காகப் பிரசாரம் மேற்கொண்டு வந்த அப்போதைய முதலமைச்சா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் அவா்கள் ஈடுபட்டிருந்தனா். 2023ஆம் ஆண்டில், விழுப்புரம் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம், ராஜேஷ் தாஸை இந்தக் குற்றச்சாட்டிற்குப் பொறுப்பாளி எனக் கண்டறிந்து, குற்றவாளி எனத் தீா்ப்பளித்து அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்திருந்தது.