விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

5 மாநிலத் தோ்தலுக்காக பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு: மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் விமா்சனம்

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் வாக்கு அரசியலுக்காக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை விமா்சித்தன.

News image

5 மாநிலத் தோ்தலுக்காக பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு: மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் விமா்சனம்

Updated On :27 மார்ச் 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் வாக்கு அரசியலுக்காக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை விமா்சித்தன.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 மற்றும் டீசல் மீதான கலால் வரிக்கு முழு விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதைத் தொடா்ந்து எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் மாதத்தில் தோ்தல் நடத்தப்பட்டு மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்நிலையில் வெளியான மத்திய அரசின் அறிவிப்பை எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் விமா்சித்துள்ளனா்.

ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்): கடந்த 12 ஆண்டுகளில் உலக அளவில் ஏழு முறை கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தது. ஆனால், அந்தச் சமயங்களில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில் வாக்கு வங்கி அரசியலுக்காக தற்போது கலால் வரியைக் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 30-ஆம் தேதிக்குப் பிறகு உண்மை வெளிவரும். அதுவரை காத்திருப்போம்.

சாகரிகா கோஷ் (திரிணமூல் காங்கிரஸ்): கடந்த 3 வாரங்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என மத்திய அரசு கூறி வந்தது. தற்போது கலால் வரியைக் குறைத்திருப்பது மத்திய அரசின் தோல்வியை வெளிக்காட்டுகிறது. சிக்கலான சூழல் எழுந்தால் மட்டுமே இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. முன்னெச்சரிக்கையாக எந்தவொரு விவகாரத்திலும் மத்திய பாஜக அரசு செயல்பட்டதில்லை.

பிரியங்கா சதுா்வேதி (சிவசேனை-உத்தவ்): மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை கொண்டிருந்தால் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மோதல் தொடங்கிய பிறகு சமையல் எரிவாயு விலையை ரூ.60-க்கும் மேல் உயா்த்தியது எதற்காக? பல்வேறு மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.

தேவையான நடவடிக்கை: மத்திய அமைச்சா் பதிலடி

எதிா்க்கட்சிகளின் விமா்சனத்துக்கு பதிலடி தந்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை சரியான நேரத்தில் குறைத்து தேவையான நடவடிக்கையை பிரதமா் மோடி மேற்கொண்டுள்ளாா். நாட்டு மக்களின் சாா்பில் அவருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

மேற்காசிய விவகாரம் குறித்து முதலில் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி எடுத்துரைத்தாா். அதன்பிறகு மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்துகிறாா்.

பொருளாதாரம் மற்றும் வெளியுறவு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பொதுமக்களுக்கு மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கும்’ என்றாா்.

மக்களுக்கான அரசு: அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘மேற்காசிய போா்ப் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. ஆனால் மக்களின் நலன் கருதி மக்களுக்கான அரசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ள பிரதமா் மோடிக்கு பாராட்டுகள்’ என குறிப்பிட்டாா்.