
தில்லி மாணவர் விடுதி விபத்து: 7 கோரிக்கைகளை முன்வைத்த சிஜேபி!
தில்லி மாணவர் விடுதி இடிந்து விபத்துக்குள்ளானதற்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முவைத்துள்ளது குறித்து...

கட்டட இடிபாடுகளை அகற்றும் வீரர்கள், உள்படம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர்கள் - பிடிஐ
தில்லி மாணவர் விடுதி இடிந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் வெளிப்படையான குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்வைத்துள்ளது.
தென்மேற்கு தில்லியில் உள்ள சத்யா நிகேதன் அருகே உள்ள நானக்புரா குருத்வாராவில் செயல்பட்டு வந்த மாணவர் விடுதி கட்டடம் நேற்று பிற்பகல் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டட விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே மாணவர் விடுதி கட்டட விபத்து குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் செளரவ் தாஸ் 7 கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் செளரவ் தாஸ் பேசியதாவது:
''பொறுப்புணர்வு இல்லாததாலேயே இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் ஆண்டுதோறும் நடப்பதாக தில்லி உயர்நீதிமன்றமும் கூறியுள்ளது.
இத்தகைய சம்பவங்களில் அப்போது ஆட்சியில் இருப்பவர்களால் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், அவை சில மாதங்களில் கவனமிழந்து முடிவுக்கு வருகிறது. பொறுப்புணர்வு என்பது இத்தகைய சம்பவங்களில் இல்லை. அதனால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 7 கோரிக்கைகளை முன்வைக்கிறது.
முதல் கோரிக்கை, இச்சம்பவத்தில் சுதந்திரமான குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நாடு முழுவதும் குறிப்பாக மாணவர்கள் பயிலும் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் போன்றவற்றில் பொறியியல் தரத்திலான கட்டமைப்பு தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள்தான். அதனால் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலைக் கொடுக்க வேண்டியது நமது கடமை.
13 மாவட்டக் குழுக்கள் வாரந்தோறும் அனைத்து கட்டடங்களையும் தணிக்கை செய்து அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். இக்குழு செயல்படாமலேயே உள்ளது. எத்தனை கடட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. எத்தனை கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டன போன்ற விவரங்களை மக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் இணையம் வழியாகச் சென்று தங்கும் விடுதிகள் குறித்து ஆராய்ந்து அறியும் வகையில் விடுதிகளின் பாதுகாப்புச் சான்றிதழ்கள், ஒழுங்குமுறை அனுமதிக் கடிதங்கள் போன்றவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
தில்லி பல்கலைக் கழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றன. ஆனால், 7000 மாணவர்கள் மட்டுமே தங்கும் வகையில் அப்பல்கலைக் கழக விடுதி உள்ளது. விடுதிகளைக் கட்ட அரசு முன்வர வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை முடிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் 6வது கோரிக்கை. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும்.
இறுதியாக கட்டட விபத்துக்கு அமைச்சர் ஆஷிஷ் சூட் பொறுப்பேற்க வேண்டும். அவரே தில்லியின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கல்வித் துறை அமைச்சர்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Delhi building collapse Cockroach Janta Party Spokesperson Saurav Das 7 demands
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





