குஜராத்தில் நோய் பாதிப்புகளால் ஒரே ஆண்டில் 62 சிங்கங்கள் பலி!
குஜராத்தில் ஓராண்டில் 62 சிங்கங்கள் நோய்வாய்ப்பட்டு பலியானதாக அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கங்கள் - கோப்புப் படம்
குஜராத் மாநிலத்தில் கடந்த ஜூலை 31, 2026-க்கு முந்தைய ஓராண்டில் 62 சிங்கங்கள் நோய்வாய்ப்பட்டு பலியானதாக அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமோனியா, ரத்த சோகை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு, பல உறுப்புகள் செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் பிற நோய்கள் போன்றவற்றால் சிங்கங்கள் பலியானதாகக் காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதில், பெரும்பாலும் சிங்கக் குட்டிகளே பலியானதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பலியான சிங்கங்களின் மொத்த எண்ணிக்கையில் 28 சிங்கக் குட்டிகள் உள்ளன.
சிங்கங்களைப் பாதிக்கும் நோய்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைக் கோரி அகமதாபாத்தின் டானிலிம்டா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சைலேஷ் மனுபாய் பார்மர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு குஜராத் வனத்துறை அமைச்சர் வெளியிட்ட எழுத்துப்பூர்வ பதிலில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டது.
மொத்த சிங்கங்களின் உயிரிழப்புகளில் 45.2% சிங்கக் குட்டிகள் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், 17 ஆண் சிங்கங்களும் 17 பெண் சிங்கங்களும் பலியாகியுள்ளன. பதிவான மொத்த உயிரிழப்புகளில் இவை ஒவ்வொன்றும் 27.4% பங்கைக் கொண்டுள்ளன.
அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கங்களின் மொத்த எண்ணிக்கை, வயது வாரியான இறப்பு விகிதங்கள், முந்தைய ஆண்டுகளின் ஒப்பீட்டு விவரங்கள் போன்றவற்றை அரசு தனது பதிலில் வழங்கவில்லை.
சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை சிங்கங்களின் உயிரிழப்பை உறுதிப்படுத்தும் வேளையில், அவற்றின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பது பற்றி அவை குறிப்பிடவில்லை.
வனத்துறை சார்பில் சிங்கங்களிடம் காணப்பட்ட பல்வேறு வகை நோய்கள் மற்றும் பாதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் நிமோனியா, ரத்தக்கசிவு நிமோனியா, ரத்த சோகை, கல்லீரல்-சிறுநீரகச் செயலிழப்பு, பல உறுப்புகள் செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மூட்டுவலி, இரைப்பை குடல் அழற்சி, உருளைப்புழுத் தொற்று, மூளை அழற்சி, மத்திய நரம்பு மண்டலக் கோளாறுகள், வயிற்று நீர்வீக்கம், மூச்சுக்குழாய் நிமோனியா, தீவிர நோய் மற்றும் செப்டிக் ஷாக் போன்றவை சிங்கங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளாகக் கூறப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட நோய்ப் பரவலை அடையாளம் காணாமல் பதிவான பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் அரசின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட நோய் பாதிப்பின் காரணமாக சிங்கங்கள் பலியான எண்ணிக்கையை வழங்காமல், மொத்த எண்ணிக்கை மற்றும் நோய்களின் பட்டியலை அரசு வழங்கியுள்ளது.
இதன்மூலம், எந்த பாதிப்பால் சிங்கங்கள் அதிகளவு பலியானது என்பதை உறுதிப்படுத்த முடியாது.
Summary
62 lions died in Gujarat within a single year due to diseases
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



