பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து ஊழியர்களுக்கு தர வேண்டிய ஈட்டிய விடுப்பு சமர்பிப்புத்தொகை, ஊழியர்களின் சேமநலநிதியிலிருந்து கடன் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை, பொங்கல் போனஸ் மற்றும் இயல்பாக கிடைக்க வேண்டிய சலுகைகள் போன்றவற்றை தராமல் மறுத்து வருகிறது. இதனால் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கரும்பொங்கலாக மாறிவிட்டது. எனவே இதனை அரசு கவனத்தில் ஈர்க்கும் வகையில் ஜன.14-ம் தேதி பொங்கல் தினமான திங்கள்கிழமை துணைவேந்தர் வீடு மற்றும் பதிவாளர் வீடு முன்பு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், பல்கலைக்கழக பணியாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கிள்ளைரவீந்திரன் உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருடன் வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.