தமிழ்நாடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அரசாணை 182 அமுல்படுத்தி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு உத்தரவிட்டார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த மாநில முதல் மாநாடு சென்னை தாம்பரத்தில் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறுகிறது.
மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சு.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் ப.வளர்மதி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் ரா.சண்முகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பதவி உயர்வுக்கு ஆணையிட்ட முன்னாள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.