விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலையும், புதிய பேருந்து நிலையமும் உடனடியாக அமைக்க நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்டத் தலைவர் கி.பசுபதிதேவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ரா.பிரபு, மாவட்டச் செயலாளர் எஸ்.கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் க.சுப்புராஜ் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மத்திய அரசு நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு நாட்டு மக்களுக்கு உண்மையை தெரி்விக்க வேண்டும். அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதியை தேசபக்தி தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலையும், புதிய பேருந்து நிலையமும் உடனடியாக அமைக்க நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலங்குளம் சிமெண்ட் ஆலைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.165 கோடியை தமிழக அரசு உடனே வழங்கி, ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ள விஷக் காய்ச்சலைத் தடுக்க நகராட்சி நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தூர் வைப்பாற்றை சுத்தம் செய்து, வேலிக் கருவேலம் மரங்களை அகற்றி, சாக்கடை நீர் கலக்காமல், தண்ணீர் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தின் வறட்சியைப் போக்க பம்பா, அழகர் அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.