டிராக்டரை விடுவிக்க லஞ்சம் கேட்ட தாசில்தார் கையும் களவுமாகக் கைது
திண்டுக்கல் மாவட்டம் பல்லப்பட்டியைச் சேர்ந்த இன்னாசிக் கவுண்டர் மகன் மகேஷ்மூர்த்தி (52). இவர் கடந்த 3ம் தேதி கோயில் விழாவுக்காக, சாலையில் மண்ணடிக்க, டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்தார்.
அப்போது விஏஓ பாலமுருகன், அவரை மறித்து, டிராக்டரை பறிமுதல் செய்தார். நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்ணோடு டிராக்டரைக் கொண்டு வந்தார்.
ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனை விசாரித்த ஆர்டிஒ உத்தமன் 15ம் தேதிக்குள் ரூ.26,100 அபராத செலுத்திவிட்டு டிராக்டரை பெற்றுக் கொள்ளுமாறுக் கூறுகிறார்.
இதையடுத்து பணம் செலுத்தி டிராக்டரை விடுவிக்க ரசீது பெற்றுக் கொண்ட மகேஷ்மூர்த்தி, 16ம் தேதி தாசில்தார் என். மோகனிடம் (49) டிராக்டரை விடுவிக்குமாறு கூறுகிறார்.
டிராக்டரை விடுவிக்க மோகன் லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கேட்கிறார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் மகேஷ் மூர்த்தி தகவல் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியபடி, வியாழக்கிழமை காலை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை மகேஷ்மூர்த்தி, மோகனிடம் அளித்த போது, அங்கே மறைந்திருந்த அதிகாரிகள் மோகனை கையும் களவுமாக கைது செய்தனர்.
மோகனை கைது செய்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான் கிளெமண்ட் தலைமையிலான காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.