
ஆந்திரத்தில் காணாமல் போன ஆக்ஸிஜன் டேங்கரை உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால், 400 கரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.
ஒடிசாவிலிருந்து விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு 18 டன் ஆக்ஸிஜனை ஏற்றி வந்த டேங்கர் லாரி வியாழக்கிழமை மதியம் காணாமல் போனது.
உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் லாரி மருத்துவமனைக்கு வரவில்லை என்றால் 400 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழக்க நேரிடும் என காவல்துறைக்கு மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஒடிசா - விஜயவாடா வழியில் உள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் விஜயவாடா காவல் ஆணையர் தகவல் அளித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில், காவல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிழக்கு கோதாவரி மாவட்டம் தர்மவாரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் லாரி நிற்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் லாரியின் ஓட்டுநரை விசாரித்ததில், தொடர் பயணம் காரணமாக லாரியை ஓட்ட முடியாமல் ஓய்வெடுத்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து, லாரி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தடையின்றி செல்வதை உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் உறுதி செய்யப்பட்டு காவல் வாகனங்களின் பாதுகாப்புடன் விஜயவாடா நோக்கி லாரி சென்றது.
காவல்துறையின் இந்த முயற்சியால் ஆக்ஸிஜன் லாரி உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றடைந்தது. இதனால் 400 நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.