அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன்(92), நுரையீரலில் தொற்று காரணமாக ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தியில்,
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ எம். ஆனந்தகிருஷ்ணன் மறைவு மிகவும் வருத்தமளிக்கின்றது.
இரண்டு முறை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய அவர், மத்திய அரசின் பல பதவிகள் மற்றும் தமிழ்நாடு பாடத்திட்ட திருத்தக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இவரின் மறைவு தமிழ்நாடு மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்விக்கும் பெரும் இழப்பாகும்.
மு. ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.