
காய்கறி விற்று ஏழைகளின் கல்விக்கு உதவும் இளைஞர்!
நாகப்பட்டினத்தில் காய்கறி விற்று ஏழைகளின் கல்விக்கு உதவும் ரஜினிகாந்த் பற்றி...

காய்கறி விற்பனையாளர் ரஜினிகாந்த். - Dinamani
நாகப்பட்டினத்தில் சுனாமி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடங்கி, நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் காய்கறி வியாபாரி ரஜினிகாந்த்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தர்மங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்று எல்லாவித தான, தர்மங்களையும் விடச் சிறந்தது ஏழையின் கல்விக்கு உதவுவது என்ற மகாகவி பாரதியின் வரிகள் யாவரும் அறிந்ததே.
சமூகத்தில் அரசு நிறுவனங்கள், செல்வந்தர்கள், தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் ஆகியவை கல்விக்கு உதவும் பணியை செய்து வருகின்றன. இதுபோன்ற உதவிகளுக்கு அரசு வரி விலக்கும் அளிக்கிறது. ஆனால் எவ்வித கல்வி பின்புலமும் இன்றி, செல்வ வளமும் இன்றி காய்கறி விற்று ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார் இளைஞர் ஒருவர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த செல்வம் -உலகம்மாள் தம்பதி. வறுமையில் வாடிய இவர்கள் பஞ்சம் பிழைப்பதற்காக 1975-களில் நாகப்பட்டினம் வந்து சேரந்தனர். அங்கு கப்பல்களுக்கு சுமைத்தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்த செல்வம், உடல்நலக்குறைவால் தலைச்சுமையாக காய்கறி விற்று வந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். இதில் மூன்றாவதாக பிறந்தவர் ரஜினிகாந்த் (41). குடும்பம் வறுமையில் இருந்ததால், தந்தைக்கு உதவியாக ஆறாம் வகுப்பு படித்தபோதே பள்ளி நேரம்போக இதர நேரங்களில் காய்கறி விற்பனைக்கு வந்து விடுவார் ரஜினிகாந்த். தள்ளுவண்டியில் தனது தங்கையுடன் தெருத்தெருவாகச் சென்று காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்தார். குடும்பச்சூழலால் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு, தந்தை நடத்தி வந்த காய்கறிக் கடைக்கு முழு நேர ஊழியராக வந்து விட்டார். குடும்பச் சூழலால் தான் படிக்க முடியவில்லை என்ற ஏக்கமும், காலணி, உடைகள் கூட இல்லாமல் இருந்த சூழலையும் மனதில் இருத்திக்கொண்ட ரஜினிகாந்த், தான் பட்ட இன்னல்கள் வேறு குழந்தைகளுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தோடு தன்னால் இயன்ற உதவிகளை செய்யத்தொடங்கினார்.
இந்தச்சூழலில் நாகப்பட்டினத்தை தாக்கி சின்னபின்னமாக்கிய சுனாமியின் மூலமாக பெரிய அளவில் உதவிகள் செய்யத்தொடங்கியதாக கூறுகிறார் ரஜினிகாந்த்.
தனது உதவிகள் தொடர்பாக அவர் கூறும்போது, சுனாமி தாக்கியபோது மக்கள் அனைவரும் உயிரை காத்துக்கொள்ள ஊரை விட்டு வெளியேறியபோது, எனது தந்தை நம்மை வாழவைத்த இந்த மண்ணில் இருந்து செல்ல வேண்டாம் என்று எங்களிடம் கூறிவிட்டார். இதையடுத்து பட்டினியால் வாடிய மக்களுக்கு எங்களிடம் இருந்த அரிசி, காய்கறி, மளிகை ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து 3 நாள்கள் உணவழித்தோம். பின்னர் எனது நண்பர்களுடன் சேர்ந்து சுனாமியில் உயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டேன். இந்தப் பணிகளின் மூலம் நாகையில் ஓரளவு அறிமுகம் ஆனேன். அதே நேரத்தில் சுனாமி மீட்புப் பணிக்காக வந்த பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்புகளை நாகையின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினேன்.
இதையடுத்து சுனாமிக்கு அடுத்தபடியாக நாகையை கஜா புயல் தாக்கியது. இதில் நாகை மாவட்டமே உருக்குலைந்தது. அப்போது எங்கள் கடையில் இருந்த 12 டன் காய்கறிகளை இலவசமாக வழங்கினோம். மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்தும் பணியில் ஈடுபட்டோம். இந்தப் பணிகளைத் தொடர்ந்து 2018 முதல் கல்வி உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எனது வருவாயில் ஒரு பகுதி மற்றும் பல்வேறு நிறுவனங்களின் உதவியோடு அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறேன்.

இதுவரை 16 அரசுப்பள்ளிகளில் ரூ. 80 லட்சம் மதிப்பில் உணவு உண்ணும் கூடங்கள் கட்டிக்கொடுத்துள்ளேன். ரூ. 80 லட்சம் மதிப்பில் மேஜை நாற்காலிகள், 17 அரசுப் பள்ளிகளில் ரூ. 68 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், 3 பள்ளிகளில் ரூ. 12 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள், 7 பள்ளிகளில் ரூ. 12 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகிய உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர மாணவர்களுக்கு உணவருந்தும் தட்டுகள், காலணிகள், பள்ளிப் பை, பள்ளிகளுக்கு கணினிகள், நாற்காலிகள் போன்றவையும் வாங்கிக்கொடுத்துள்ளேன்.
மேலும் மருத்துவம், பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் மூலம் கல்வி உதவித்தொகையும் செய்து வருகிறேன். இதில் எம்பிபிஎஸ் 1, சித்த மருத்துவம் 6, ஹோமியோபதி 2, துணை மருத்துவம் 2, சட்டம் 1, பொறியியல் மற்றும் கலை அறிவியல் 20 என 32 மாணவ, மாணவியருக்கு 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் வரை கல்விக் கட்டணத்தையும் செலுத்தி வருகிறேன். இவை தவிர ஆத்தூர் கிராமத்தில் மாணவர்களுக்காக ரூ. 6 லட்சம் மதிப்பில் டியூசன் கட்டடம் கட்டித் தந்து ரூ. 3 ஆயிரம் ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியரையும் நியமித்துள்ளேன். அங்கு 28 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
மேலும் சாலையோரம் வசித்து வந்த மூவருக்கு எனது சொந்தப் பணத்தின் மூலம் வீடுகளும் கட்டித்தந்துள்ளேன். பணமில்லாததால் எந்தக் குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக் கூடாது என்ற காரணத்தாலும், எனது சிறு வயதில் வறுமையால் நான் பட்ட சிரமங்கள் எனது மனதில் ஆழப்பதிந்திருப்பதாலும் இந்த உதவிகளைச் செய்து வருகிறேன். இந்த சேவைகள் மேலும் பெரிய அளவில் தொடர வேண்டும் என்றே எண்ணுகிறேன் என்றார்.
Summary
A young man helps the poor with their education by selling vegetables in Nagappattinam!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






