
உத்திரப்பிரதேசத்தின் பான்ஸ்கான் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சதால் பிரசாத் 110 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கமலேஷ் பஸ்வானிடம் தோல்வியடைந்ததாக நேற்று (ஜூன் 4) மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் கூறியதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி.யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மறுவாக்கு எண்ணிக்கை நடத்தத் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது.
அந்தத் தொகுதியில் 108-ம் எண் வாக்குச்சாவடியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் விவி பேட் சீட்டுகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மாலை இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் கமலேஷ் பாஸ்வான் 4,28,693 வாக்குகள் பெற்று 3150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சதால் பிரசாத் 4,25,543 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
தோல்வியடைந்த பின் காங்கிரஸ் வேட்பாளர் சதால் பிரசாத் அவரது ஆதரவாளர்களுடன் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.