
பெஷாவா்: ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றபோது பாகிஸ்தான் ராணுவத்தினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) குழுவைச் சேர்ந்த 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பழங்குடியினா் பகுதியான வடக்கு வஜிரிஸ்தான் மாவட்ட எல்லை வழியாக பிபக் கர் பகுதிக்கு அருகில் அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் எல்லைக்குள் வெள்ளிக்கிழமை இரவு ஊடுருவினா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இதில், 41 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் ஆப்கானிஸ்தானைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த சண்டை குறித்து ராணுவ ஊடகப் பிரிவிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.
பாகிஸ்தானில் இயங்கிய பல்வேறு இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஒரே குடைக்குள் கொண்டு வரும் வகையில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு உருவாக்கப்பட்டது. ராணுவக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றளவிலும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைகளில் வலுவாக இயங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.