கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் பலி: முதல்வர் இரங்கல்!

கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் பலி: முதல்வர் இரங்கல்!

கொல்கத்தா நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

கொல்கத்தா நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோரும் மற்றும் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்; நெஞ்சம் கலங்கினேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, இத்துயர்மிகு நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நமது அரசு துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தா தீ விபத்து

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மாமனார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப் பொருள்களைக் கொண்டு வாசனை திரவியம் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

பிரபு மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் தியா(10), ரிதன்(3) மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் கொல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஐந்து ஆறு தளங்களைக் கொண்ட தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு குழந்தைகள் மற்றும் மாமனாருக்கு உணவு வாங்குவதற்காக பிரபு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, நட்சத்திர ஹோட்டலில் திடீரென்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பிரபுவின் இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மாமனார் ஆகிய மூவரும் உடல் கருகி பலியாகினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஹோட்டலில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.

தீ விபத்தில் இறந்து போன முத்துகிருஷ்ணன் மற்றும் குழந்தைகள் ரியா, ரீதன் ஆகியோரது உடல்களை உப்பிடமங்கலத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com