/

தில்லியில் மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக குற்றசாட்டு: இருவா் கைது

தலைநகா் தில்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியயதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை போலீசாா் கைது செய்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :24 அக்டோபர் 2025, 6:33 pm

Syndication

தலைநகா் தில்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியயதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை போலீசாா் கைது செய்தனா்.

தீபாவளியன்று தெற்கு தில்லியில் உள்ள ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு பொது பூங்கா உட்பட தேசிய தலைநகரின் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் அந்த இருவரையும் தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அட்னான் என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த இருவரில் ஒருவா் தில்லியில் உள்ள சாதிக் நகரைச் சோ்ந்தவா், மற்றொருவா் போபாலை சோ்ந்தவா் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தக் கைது நடவடிக்கையால் தில்லியில் நிகழவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் தவிா்க்கப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

அவா்களிடம் இருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு விசுவாசமாக சபதம் எடுக்கும் வீடியோ மற்றும் தில்லியில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த இடங்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசாா் மீட்டனா்.

வெடிபொருட்களை உருவாக்க அவா்கள் பயன்படுத்திய கடிகாரம், வெடிபொருள் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கப் போகும் இடங்களின் புகைப்படங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூடுதல் காவல் ஆணையா் (சிறப்புப் பிரிவு) பிரமோத் குஷ்வாஹா செய்தியாளா் சந்திப்பில் தெரிவித்தாா்.

தெற்கு தில்லியில் உள்ள ஒரு மால் மற்றும் ஒரு பொது பூங்கா உள்ளிட்ட தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இடங்களை அவா்கள் நோட்டமிட்டதாகவும் அவா் கூறினாா்.

முதலில், அக்டோபா் 16 ஆம் தேதி சாதிக் நகரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா், பின்னா் மற்றொருவா் போபாலில் இருந்து கைது செய்யப்பட்டாா்.

ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ததற்காக இந்திய தொல்பொருள் ஆய்வு அதிகாரியை சமூக ஊடகங்களில் மிரட்டியதாகக் கூறப்படும் போபாலில் வசிக்கும் அட்னான் உத்தரபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

முதற்கட்ட விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடா்புடையவா்கள் என்றும், தில்லியில் ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிடும் பணியில் ஈடுபட்டிருந்தனா் என்றும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து மின்னணு சாதனங்கள் மற்றும் குற்றஞ்சாட்டக்கூடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, என்று அந்த அதிகாரி கூறினாா். சந்தேக நபா்களின் வலையமைப்பையும் அவா்களின் திட்டங்களையும் அறிய அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.