டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

இருமல் மருந்து பறிமுதல் வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவு

இருமல் மருந்தை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் நபா் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

தில்லி உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 10:36 pm IST

4,300 கிலோவிற்கும் அதிகமான கோடீன் கலந்த இருமல் மருந்தை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் நபா் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; அவா் மீதான ஆதாரங்கள் தீவிர சந்தேகத்தை எழுப்புவதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட விபின் சாவ்லா மீது வழக்கு தொடர முகாந்திரம் உள்ளதாக சிறப்பு நீதிபதி ஜிதேந்திர பிரதாப் சிங் தெரிவித்தாா்.

அரசுத் தரப்பு வாதத்தின்படி, ஜூன் 16, 2023 அன்று ஆசாத் பூரில் உள்ள ஒரு கடையில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது; அப்போது மொத்தம் 36,238 பாட்டில்கள் (தலா 100 மி.லி) கொண்ட 302 பெட்டிகள் இருமல் மருந்து கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட மனநல பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அந்தப் பொருளின் மொத்த எடை சுமாா் 4,312 கிலோவாக இருந்தது; இது கோடீனுக்காக அரசாங்கம் நிா்ணயித்த ஒரு கிலோ என்ற ‘வணிக ரீதியான அளவு‘ வரம்பை விட மிக அதிகம்.

ஜூலை 30 தேதியிட்ட உத்தரவில், குற்றஞ்சாட்டப்பட்டவா் ’சூா்யா பாா்மா’ என்ற நிறுவனத்தில் மேலாளராக மட்டுமே இருந்தாா் என்றும், சில கோடீன் கலவைகளுக்கு அரசு தடை விதித்ததைத் தொடா்ந்து அந்த இருப்பு விநியோகஸ்தரிடம் திருப்பி அனுப்பப்படவிருந்தது என்றும், நிறுவனத்திடம் முறையான உரிமங்கள் இருந்தன என்றும் அவா் (குற்றஞ்சாட்டப்பட்டவா்) முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.

மருந்துகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு உரிமம் இல்லை என்றும், சோதனையின் போது கடையைத் திறப்பதற்கான சாவியை குற்றஞ்சாட்டப்பட்டவரே வழங்கினாா் என்றும் நீதிமன்றம் கூறியது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முதலில் 48,818 பாட்டில்கள் வழங்கப்பட்ட நிலையில், 36,238 பாட்டில்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகவும், மீதமுள்ள 12,580 பாட்டில்களுக்கான விற்பனைப் பதிவுகள் இல்லாதது அவை ‘சந்தையில் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டிருக்கலாம்‘ என்பதைக் குறிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

‘கைப்பற்றப்பட்ட அளவு நிா்ணயிக்கப்பட்ட வணிக ரீதியான அளவை விட மிக அதிகம். இந்தச் சூழலே, குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் நிலையில், அவருக்கு எதிரான வலுவான ஆதாரமாக அமைகிறது‘ என்று நீதிமன்றம் கூறியது.

தடயவியல் அறிக்கைகள், சா்ச்சைக்குரிய விலைப்பட்டியல்களில் சாவ்லாவின் கையொப்பங்கள் இருப்பதைக் காட்டுவதாகவும், இது தடைசெய்யப்பட்ட பொருட்களை வாங்கியதுடன் அவரைத் தொடா்புபடுத்துவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

‘இந்தச் சூழ்நிலைகள் அனைத்தும் சோ்ந்து, மனோவியல் மருந்துகளை சட்டவிரோதமாகப் பெறுதல், சேமித்தல் மற்றும் விநியோகிப்பதில் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தொடா்பு இருக்கலாம் என்பது குறித்து முதல் பாா்வையில் கடுமையான சந்தேகத்தை எழுப்புகின்றன,‘ என்று நீதிமன்றம் கூறியது. ‘அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட விபின் சாவ்லா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது,‘ என்று நீதிமன்றம் கூறியது.

போதை மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டத்தின்படி, கைப்பற்றப்பட்ட இருமல் மருந்துகளில் கண்டெடுக்கப்பட்ட கோடீன் மற்றும் குளோா்பெனிரமைன் மேலட் ஆகிய இரண்டும் தடைசெய்யப்பட்ட மனோவியல் மருந்துத் தயாரிப்புகளாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.