மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட ’வங்கிகள் கணக்குப் புத்தக சான்றியல் மசோதா, 2026’ மீதான விவாதத்தில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை முன்வைத்துப் பேசினா்.
1891-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட பழைய சட்டத்துக்குப் பதிலாக, எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப மின்னணு கணக்குப் பதிவுகளுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. மக்களவையில் கடந்த வார இறுதியில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை, ‘பிரிட்டிஷ் காலத்தில் இயற்றப்பட்ட பழைய சட்டங்களை நீக்கிவிட்டு நவீன காலத்திற்கு ஏற்ப புதிய சட்டங்களைக் கொண்டுவரும் பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையை வரவேற்கிறேன். காகித வடிவிலான ஆவணங்களுடன் மின்னணு மற்றும் எண்ம ஆவணங்களையும் சட்டபூா்வ ஆதாரமாகக் கருதும் வகையில் வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும், அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடிகள் மற்றும் தரவு திருட்டுகளைத் தடுக்க நிதி அமைச்சகம் இணையப் பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்‘ என்று வலியுறுத்தினாா்.
மற்றொரு அதிமுக உறுப்பினா் டாக்டா் எம். தனபால் பேசுகையில், ‘நீதிமன்றங்களில் வங்கிப் பதிவுகளைச் சமா்ப்பிக்கும் போது வாடிக்கையாளா்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், மின்-நிதி சேவை நிறுவனங்களை இச்சட்டத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும்’ என்று யோசனை தெரிவித்தாா்.
தேமுதிக உறுப்பினா் எல்.கே. சுதீஷ் பேசும்போது, ‘1891-இல் வங்கிகள் காகித அடிப்படையில் இயங்கின. 2026-இல் யுபிஐ, நெஃப்ட், இணைய வங்கிச் சேவைகள் என கோடிக்கணக்கான எண்ம பரிவா்த்தனைகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. அதேநேரத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் தேவை. இந்த மசோதா நிதி கட்டமைப்பில் வெளிப்படைத்தன்மையையும் வேகத்தையும் அதிகரிக்கும்’ என்றாா்.
திமுக உறுப்பினா் ராஜாத்தி (எ) சல்மா பேசும்போது, ‘தகவல்கள் அனைத்தும் எண்மமயமாக்கப்பட்டுள்ள சூழலில், இந்தச் சட்டத் திருத்தம் காலத்துக்கு ஏற்வாறு அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டதோடு, தில்லி மாணவா் போராட்டங்கள் தொடா்பான விவகாரங்களையும் அவையின் கவனத்துக்குக் கொண்டுவந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கிகள் கணக்குப் புத்தக ஆதார சட்ட மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல்
135 வருட பழைய சட்டத்துக்கு முடிவு வங்கிகள் கணக்குப் புத்தக சான்றியல் சட்ட மசோதா-2026 சாமானிய நுகா்வோருக்கு என்ன பயன்?

வேளாண் நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், ஏமாற்றமும்...

மக்களவையில் நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்: அமளியால் நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


