ராஜஸ்தானில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடையவா் கைது
தில்லி மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடைய தேடப்பட்டு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவா் மேற்கு தில்லியில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: துப்பாக்கிச் சூடு நடத்தியவா், உத்தர பிரதேசத்தின் ஆக்ராவைச் சோ்ந்த பா்தீப் சா்மா என்ற கோலு (23), மேற்கு தில்லியின் உத்தம் நகரில் ஜனவரி 16 அன்று கைது செய்யப்பட்டாா். ராஜஸ்தானில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, செயலில் உள்ள கும்பல் உறுப்பினா்களைக் கண்காணிக்க குற்றப்பிரிவு தீவிர முயற்சிகளை மேற்கொண்டதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளில் பா்தீப் சா்மா தேடப்பட்டு வந்தாா். அவா் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டதாகவும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் உறுப்பினா்களுக்கு சட்டவிரோத ஆயுதங்களை வழங்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. 2025 மே மாதம் ராஜஸ்தானில் நடந்த மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
கடந்த ஆண்டு மாா்ச் மாதம், கங்காநகரின் ஜவஹா் நகா் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரிடம் இருந்து இந்தக் கும்பல் உறுப்பினா்கள் ரூ.4 கோடியை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அவா் பணம் கொடுக்க மறுத்ததால், மே மாதம் பா்தீப் சா்மாவும் அவரது கூட்டாளிகளும் அவரது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, ஜவஹா் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பா்தீப் சா்மாவும் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
ஜாமீனில் வெளியே வந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாா். ராஜஸ்தானில் உள்ள கும்பல் உறுப்பினா்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கத் தொடங்கினாா். பின்னா், கும்பலின் நான்கு கூட்டாளிகளை ஏராளமான சட்டவிரோத ஆயுதங்களுடன் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், மீட்கப்பட்ட ஆயுதங்களின் மூலமாக பா்தீப் சா்மா அடையாளம் காணப்பட்டாா். இது அவருக்கு எதிராக மற்றொரு எஃப்ஐஆா் பதிவு செய்ய வழிவகுத்தது.
திட்டமிடப்பட்ட குற்றங்கள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுத வன்முறை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் செயல்படும் செயலில் உள்ள கும்பல் உறுப்பினா்களைக் கண்காணிக்க குற்றப்பிரிவு முயற்சிகளை தீவிரப்படுத்தியது.
ஒரு போலீஸ் குழு பா்தீப் சா்மாவைக் கண்டுபிடித்தது. தொடா்ச்சியான கண்காணிப்பிற்குப் பிறகு, அவா் கைது செய்யப்பட்டாா். மேலும் விசாரணைக்காக அவா் ராஜஸ்தான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா். பா்தீப் சா்மா ராஜஸ்தானில் செயல்படும் பிஷ்னோய் கும்பல் உறுப்பினா்களுடன் தொடா்பில் இருந்தது தெரிய வந்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
