
மெய்ஞ் ஞானம்
இந்த நூலில் இடம்பெற்றுள்ள 'ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனக் கொள்வாயே' என்ற மகாகவி பாரதியாரின் வரியில் புலப்படும் மெய்ஞ் ஞானச் சாற்றை ருசிக்க முடிந்தால் போதும், மெய்ஞ் ஞான பெருங்கடலில் நீந்தித் திளைக்கலாம்.

மெய்ஞ் ஞானம்-பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்; பக். 276; ரூ. 300; ஜோதி பதிப்பகம், சென்னை-600 037. ✆ 99401 90616.
இறைவன் தன்னை உணரவும், அறியவும்தான் மனிதனைப் படைத்துள்ளான்; இதுவே, மனிதப் படைப்பின் ரகசியம். இதைத்தான் தன்னை அறிதல் என்று ஞானியர் கூறுவர். இந்த ரகசியத்தை விளக்குவதற்காகவே இறைத் தூதர்கள் வந்தனர். இந்த பரம ரகசியத்தை நூலாசிரியர் தனது ஆழங்காற்பட்ட அறிவால் எளிமையாக விளக்கியுள்ளார்.
இந்த நூலை மொத்தம் நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வோர் படிநிலைகளாகக் கட்டமைத்துத் தந்துள்ளார். முதலாவது பகுதியில் சட்ட திட்டங்கள், பின்பற்ற வேண்டியவை, பின்பற்ற வேண்டாதவை எனப் பிரித்து உணர்த்துகிறார். நூலாசிரியர் 'நம்பிக்கையை' பிரதானமாகக் கூறி, குருவைச் சென்று சரணடையச் சொல்கிறார். அதுவே ஞானத்தின் முதல்படியாக எடுத்துரைக்கிறார்.
இரண்டாவது பகுதி முழுவதும் ஞான ரகசியத்தை வெளிப்படுத்தும் பாடல்களை தமிழ் பக்தி இலக்கியங்கள், பாரதியார், மெய்வழிச்சாலை ஆண்டவர், தக்கலை பீரப்பா என அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் சுட்டிக்காட்டி அதன் விளக்கத்தைக் கூறியிருக்கிறார். இதில் இவர் முக்கியமாக சொல்ல வருவது தாயுமான சுவாமிகளின் பாடல்கள். மேலும், மூன்றாவது பகுதியில் நூலாசிரியர் மெய்ஞ் ஞானத்தின் சான்றுகளாகப் பதிவிட்டிருக்கும் பாடல்கள் எல்லாமே ஒரே புள்ளியை நோக்கித்தான் சுட்டிக்காட்டுகின்றன. அதுதான் ரகசியத்திலும் ரகசியம்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள 'ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன் உணர்வு எனக் கொள்வாயே' என்ற மகாகவி பாரதியாரின் வரியில் புலப்படும் மெய்ஞ் ஞானச் சாற்றை ருசிக்க முடிந்தால் போதும், மெய்ஞ் ஞான பெருங்கடலில் நீந்தித் திளைக்கலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





