ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2024 (மிதுனம்)

மிதுன ரிஷப ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2024 (மிதுனம்)

மிதுன ரிஷப ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மற்றவர்கள் புகழும் வகையில் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் மிதுனராசி அன்பர்களே!

இந்த வருடம் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கியே இருக்கும். எண்ணிய எண்ணங்கள் யாவும் கைகூடும்.  அனைத்து தொழிலிலும் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு இதுவரை இருந்து வந்த திருமணத் தடை நீங்கும். வீடு, வாகனம், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும்.

எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் மேலோங்கினாலும், சமரச பேச்சால் நல்ல சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பேச்சுகளில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். தட்ப வெப்ப மாறுதலால் உடல்நலம் சற்று பாதிக்கப் படலாம். முன்னெச்சரிகையாக இருந்து நோய்களில் இருந்து காத்துக் கொள்ளுங்கள். தந்தை வழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடை நீங்கும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகும். உங்களுக்கு பல்வேறு வழியில் கிடைக்கும் ஆதாயத்தை ஆடம்பரமான பொருட்களில் முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

மேல்அதிகாரிகளின் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்களால் தேவையில்லாமல் அதிருப்தியான சூழல் உருவாகும். நடைமுறைச் செலவுகளில் அதிக தேவை ஏற்படும். கடன் வாங்க நேரிடலாம். இருப்பினும் எதிர்கால தேவைக்காக சேமிப்பதில் தடை ஏதும் இருக்காது. மனதில் அசாத்தியமான தைரியம் ஏற்படும். இறைவனை வேண்டி அந்த தைரியத்தை நல்ல வழியில் பயன் படுத்துவது நல்லது. புகழ் பெறுவதற்குண்டான நல்ல வாய்ப்புகளும் உண்டாகும். பணியில் இருந்துகொண்டே படிப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடு பயணங்கள் உருவாகும் நிலை ஏற்படும்.

தொழிலதிபர்களுக்கு..

பட்டு, பருத்தி, தோல், நைலான் தொடர்பான தொழிலில் உள்ளவர்கள் அதிக ஆடர்கல் பெற்று பொருளாதார மேன்மை அடைவார்கள். மாற்றுப் பயிர் உற்பத்தி செய்பவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும். ராகுவின் குரு வீடு சஞ்சாரத்தால் கணிணி, தொலைதொடர்பு, அரசாங்கம் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும். பொதுவில் அனைத்து தொழில் அதிபர்களுக்கும் மனதில் தைரியமும், நல்ல லாபமும் கிடைக்க வழி உண்டு. வியாபாரத்திற்கென்று புதிய அலுவலகம் வாங்குவீர்கள். உங்கள் வியாபாரத்தின் கிளைகளை பரப்புவீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை காணப்படும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கல். அழகு சாதன பொருட்கள் தொழிலில் இருப்பவர்கள் வளர்ச்சி பெறுவார்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். இவ்வாண்டில் நடைபெறும் குருப்பெயர்ச்சிக்குப் பின் வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். அரசு சார்ந்த ஆவணங்களை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு..

லட்சிய சிந்தனையுடன் படித்து அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள். இதனால் அனைவரிடமும் பாராட்டு பெறுவீர்கல். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம். பிரச்சனை பெரிதாகாமல் சுமூகமாக பேசி மோதல்களைத் தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனம். வாகனங்களில் நிதானமாக பயணம் செய்வது நன்மையைத் தரும். உல்லாச பயணம் செல்லும் போது அதிக கவனம் தேவை. ஆசிரியரிகளின் அறிவுரைகளையும், பெற்றோரின் வழிகாட்டுதல்களையும் கேட்பது எதிர்கால வாழ்க்கைக்கு உதவும். தன்னிச்சையாக முடிவெடுப்பதை தவிர்த்து பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

பெண்களுக்கு..

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எந்த செயலிலும் கால தாமதம் ஏற்படலாம். பொறுமையாக கையாள்வது உங்கள் திறமை. குடும்பம் சார்ந்த பெண்களுக்கு வேலைகள் கடினமாக தென்படும். திட்டமிட்டு செய்வது கடினத்தைக் குறைக்கும். ஏற்கனவே சேர்த்து வைத்த பணம் சுப காரியங்களுக்காக கரையலாம். சுபச்செலவாதலால் மனம் வருந்தத் தேவையில்லை. குழந்தைகளை வளர்ப்பதில் மிகுந்த கண்டிப்பு தேவை.  உங்கல் கண்டிப்பு குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும். புதிய சிநேகிதிகள் அறிமுகம் ஆகலாம். அவர்களில் நல்லவர்களை இனம் கண்டு கொள்வது நல்லது. ஆன்மீக வழிபாடு உங்களைக் காக்கும்.

கலைஞர்களுக்கு..

கலைஞர்கள் கிடைத்த வாய்ப்புகளை முறைப்படி அணுகுவது நன்மை தரும். கவனமாக  அணுகினால் உங்கள் வெற்றிக்கு வழி உண்டாகும். உங்கள் நலனில் அக்கறை உள்ள நபர்கள் சொல்லும் அறிவுரைகளை தவறாமல் கேளுங்கள். அதை நல்ல வழியில் பயன் படுத்திக் கொள்ளுங்கள். ஓவியம், சிற்பம், வர்ணப்பூச்சு, கட்டிடக் கலைஞர்கள், மர வேலை செய்பவர்கள் ஆகிய தொழிலில் உள்ள கலைஞர்களுக்கு நற்பலன் கிட்டும். தங்க நகை சார்ந்த கலைஞர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய வருடம். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் போது கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு..

அரசியல்துறையில் நற்பெயர் பெற தகுந்த சூழ்நிலைகள் உருவாகும். மேலிடம் கொடுக்கும் வேலையை கவனத்துடன் செய்யுங்கள். இதனால் மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் பதவியைப் பெற அதிகமான பணம் செலவழிக்க வேண்டி வரும். தேவையற்ற வழியில் பணம் செலவழிப்பதைத் தவிர்த்து கவனமுடன் செயல் படுவது அவசியம். பெண் அரசியல் துறையினருக்கு அவமான சூழ்நிலை ஏற்படலாம். மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்தால அவமானத்தை தவிர்க்கலாம். அரசு சார்ந்த முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை. ஏனெனில் அரசின் பார்வை உங்கள் மீதே இருக்கும் சூழல் உருவாகலாம். பகைவர்களும் நண்பர்களாகும் வாய்ப்பு ஏற்படும். தங்கள் தேவைக்காக நண்பர்களாகும் குணம் உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:

எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட  தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம்  முன்னேற்றம் அடையும். புதிய தொழில்  அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

திருவாதிரை:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில்   மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.   

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும்  எளிதாக செய்து முடிப்பீர்கள். காரிய தடை நீங்கும். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து  தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

அனுகூலமான திசைகள்: வடக்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் மற்றும் திவ்யதேசங்கள்

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com