
ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு ஐசிசியின் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கோப் டஃபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் விலகல்!
அண்மையில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், 48.60 சராசரியுடன் 243 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவராகவும் அவர் மாறினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா அபாரமாக செயல்பட்டு ரன்கள் குவித்தார். 263 ரன்கள் குவித்து நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அவர் இரண்டு சதங்களையும் விளாசினார்.
டி20 போட்டிகளில் உலகின் சிறந்த பந்துவீச்சாளரான ஜேக்கோப் டஃபி, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்த டி20 தொடரில் அவர் 6.17 எகானமியில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் டி20 போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 4 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இருக்கும் இவர்கள் மூவரில் யார் விருதை வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.