
இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 26) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்ததால், இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறியது.
ஜோஸ் பட்லர் அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (ஒருநாள், டி20) போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து ஜோஸ் பட்லர் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜோஸ் பட்லர் கூறியதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போகிறேன். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதை எனக்கும் அணிக்குமான சரியான முடிவாக இருக்கும். வேறு யாராவது கேப்டன் பொறுப்பினை ஏற்று மெக்கல்லமுடன் இணைந்து செயல்படுவார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் எனது கேப்டன் பொறுப்புக்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால், முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. அதனால், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என உணர்ந்தேன் என்றார்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த ஜூன் 2022 ஆம் ஆண்டு ஜோஸ் பட்லர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின், இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இருப்பினும், அண்மைக் காலங்களில் நடைபெற்ற தொடர்களில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது. ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் நடப்பு சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்தால் தக்கவைக்க முடியவில்லை.
34 வயதாகும் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை அதன் குரூப் ஸ்டேஜின் கடைசிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக ஒருமுறை கேப்டனாக வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.