சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாததில் வருத்தமில்லை: சூர்யகுமார் யாதவ்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமளிக்கவில்லை என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் (கோப்புப் படம்)
சூர்யகுமார் யாதவ் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமளிக்கவில்லை என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடத்தப்படுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. ரோஹித் சர்மா கேப்டனாகவும், இளம் வீரர் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறவில்லை.

சரியாக விளையாடவில்லை

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாத நிலையில், ஒருநாள் போட்டிகளில் சரியாக விளையாட முடியாதது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும். நான் சரியாக விளையாடியிருந்தால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பேன். நான் ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதேவேளையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியைப் பாருங்கள். அணி மிகவும் வலுவாக உள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள அனைவரும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். அவர்கள் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். மேலும், அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள். அவர்களை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் நன்றாக செயல்பட்டிருந்தால், நான் அணியில் இருந்திருப்பேன். ஆனால், சிறப்பாக செயல்படாதது எனக்கு வருத்தமளிக்கிறது. நன்றாக விளையாடுபவர்கள் அணியில் இடம்பெற சரியான தேர்வாக இருப்பார்கள். முகமது ஷமி அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். பும்ரா முழு உடல் தகுதி பெற்று சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் இருவரும் பந்துவீசுவது சிறப்பாக இருக்கும் என்றார்.

டி20 போட்டிகளில் இந்திய அணியைக் கேப்டனாக வழிநடத்தி வரும் சூர்யகுமார் யாதவ், இதுவரை 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 773 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com