மனநலத்துக்கு முக்கியம் அளித்ததால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதாக ஆர்சிபி அணியைச் சேர்ந்த ஆஸி. வீரர் ஆடம் ஸாம்பா கூறியுள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாட வீரர்களிடையே தயக்கம் நிலவி வருகிறது. ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள இரு ஆஸி வீரர்களான கேன் ரிச்சர்ட்சனும் ஆடம் ஸாம்பாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்ப முடிவெடுத்துள்ளார்கள். இதனால் இருவரும் ஐபிஎல் போட்டியில் இடம்பெற மாட்டார்கள் என ஆர்சிபி அறிவித்துள்ளது. இவர்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த மற்றொரு ஆஸி. வீரர் ஆண்ட்ரூ டை, நாடு திரும்பினார். கடந்த வாரம் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரரான லியம் லிவிங்ஸ்டன், கரோனா பாதுகாப்பு வளையத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக சொந்த நாட்டுக்குத் திரும்பினார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியது பற்றி ஒரு பேட்டியில் ஆடம் ஸாம்பா கூறியதாவது:
கரோனா நிலைமை மிக மோசமாக உள்ளது. பயிற்சிக்குச் சென்றாலும் எனக்கு ஊக்கம் இல்லாமல் இருந்தது. பயிற்சிக்குத் தாமதமாக வர ஆரம்பித்தேன். அணியில் நான் விளையாடுவதுமில்லை.
கரோனா பாதுகாப்பு வளையத்தால் சோர்வு ஏற்படுவது உள்பட சில விஷயங்களும் உண்டு. பயணிகள் விமானங்களுக்குத் தடை குறித்த செய்திகள் வந்தபோது ஊருக்குத் திரும்ப இது சரியான நேரம் எனத் தோன்றியது.
போட்டியிலிருந்து பாதியில் வெளியேறுவதால் வருமான இழப்பு ஏற்படுகிறது. ஆனால் என்னுடைய மனநலத்துக்கு முதலில் முக்கியத்துவம் அளித்தேன் என்றார்.