ஐபிஎல் 2022 போட்டியை சிஎஸ்கே அணி வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்துள்ளார். இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 4 முறையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது.
இந்நிலையில் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் ஒரு பேட்டியில் சிஎஸ்கே அணி பற்றி கூறியதாவது:
கேகேஆர் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோற்றதால் சிஎஸ்கே அணி மனம் உடைந்துவிடாது. அந்த ஆட்டத்தில் நிறைய நேர்மறை விஷயங்கள் நடைபெற்றுள்ளன. முதல் ஆட்டத்தில் மேல்வரிசை வீரர்கள் அரிதான முறையில் தோல்வியடைந்துள்ளார்கள். அணியில் ஏராளமான அனுபவசாலிகள் உள்ளார்கள். ஒரு வலுவான அணியாக அவர்கள் மீண்டு வருவார்கள். மொயீன் அலி இனி வரும் ஆட்டங்களில் இடம்பெறுவார். ஐபிஎல் போட்டியை வெல்லக்கூடிய அளவுக்கு சிஎஸ்கே வலுவான அணியாக உள்ளது. அதனால் தான் அது ஆபத்தான அணியாக உள்ளது என்றார்.