தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னௌ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் குயிண்டன் டி காக் களமிறங்கினர். குயிண்டன் டி காக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் (3 ரன்கள்), மார்கஸ் ஸ்டொய்னிஸ் (8 ரன்கள்), நிக்கோலஸ் பூரன் (0 ரன்), தீபக் ஹூடா (10 ரன்கள்) மற்றும் க்ருணால் பாண்டியா (3 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். லக்னௌ அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் களமிறங்கிய ஆயுஷ் பதோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் பதோனி அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. தில்லி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேப்பிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.