சுனில் நரைனின் அசத்தலான சதத்தால் ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரகுவன்ஷி (30 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (11 ரன்கள்), ஆண்ட்ரே ரஸல் (13 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தபோதிலும், சுனில் நரைன் களமிறங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது விக்கெட்டினை கைப்பற்ற முடியாமல் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர். அவ்வப்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வந்த வண்ணமே இருந்தது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் போல்டானார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரது சிறப்பான ஆட்டத்தை மைதானத்திலிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினர். இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டிரண்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் தலா ஒரு விக்கெடினைக் கைப்பற்றினர்.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி வருகிறது.