மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா களமிறங்கினர். சஹா 19 ரன்களிலும், ஷுப்மன் கில் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் சாய் சுதர்ஷன் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்சாய் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இருப்பினும் ஓமர்சாய் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கியவர்களில் டேவிட் மில்லர் (12 ரன்கள்), ராகுல் திவாட்டியா (22 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய சாய் சுதர்ஷன் 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜெரால்டு கோட்ஸீ 2 விக்கெட்டுகளையும், பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.