ஆண்ட்ரே ரஸல் சிறப்பாக விளையாடுவதற்கு ரமன்தீப் சிங்கின் அதிரடி ஆட்டம் காரணமாக அமைந்ததாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆண்ட்ரே ரஸல் அணியை சரிவிலிருந்து மீட்டார். சிக்ஸர் மழை பொழிந்த ரஸல் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த நிலையில், ஆண்ட்ரே ரஸல் சிறப்பாக விளையாடுவதற்கு ரமன்தீப் சிங்கின் அதிரடி ஆட்டம் காரணமாக அமைந்ததாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரஸல் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவதற்கு ஏற்ற சூழலை ரமன்தீப் சிங்கின் அதிரடியான ஆட்டம் அமைத்துக் கொடுத்தது. டி20 போட்டிகளில் பேட்ஸ்மேனின் அதிரடியான ஆட்டத்தை தடுப்பதற்கு விக்கெட் எடுப்பதே ஒரே வழி என்பது எங்களுக்குப் புரிந்தது. ரஸலின் விக்கெட்டினை எடுத்திருந்தால் கொல்கத்தாவின் ஸ்கோர் வேறு மாதிரியாக இருந்திருக்கும். விக்கெட் எடுப்பதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
நேற்றையப் போட்டியில் ரமன்தீப் சிங் அதிரடியாக 17 பந்துகளில் 35 ரன்கள் (ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) குவித்தது குறிப்பிடத்தக்கது.