
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள வன்ஷ் பேடிக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வன்ஷ் பேடிக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார்.
இந்த நிலையில், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ள வன்ஷ் பேடிக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல் சிஎஸ்கேவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் உர்வில் படேல், சையது முஸ்டாக் அலி கோப்பையில் 28 பந்துகளில் சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
26 வயதாகும் உர்வில் படேல் இதுவரை 47 டி20 போட்டிகளில் விளையாடி 1,162 ரன்கள் குவித்துள்ளார். தற்போது அவர் ரூ.30 லட்சத்துக்கு சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார்.
இதற்கு முன்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு உர்வில் படேல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்தும் வெளியேறியது.
சிஎஸ்கே அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.