

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், இந்த வார இறுதியில் தொடங்க இருந்த பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வரும் அவர், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தான் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்த ஆண்டு நான் பங்கேற்கப்போவதில்லை என்பதை தெரிவிப்பதில் வருத்தமடைகிறேன். இந்தப் போட்டியில் பங்கேற்கவே விரும்பினேன். எனினும், இந்த ஆண்டில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற களைப்பு மற்றும் பிரிஸ்பேன் போட்டிக்கு தாமதமாக தயாராகத் தொடங்கியது போன்ற காரணங்களால் என்னால் விளையாட இயலவில்லை.
எனினும், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் வகையில் அதற்கு தயாராவதற்காக வரும் ஜனவரி 4-ஆம் தேதி மெல்போர்ன் வருகிறேன் என்று நடால் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 15-ஆம் தேதி தொடங்குகிறது.
சமீபத்தில் நடால், 2018-ஆம் ஆண்டின் முதல் போட்டியான அபுதாபியில் நடைபெறும் முபாதலா டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த சீசனில் நடால் கடைசியாக ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் விளையாடியிருந்தார். அதில் அவர் பெல்ஜியத்தின் டேவிக் காஃபினிடம் வீழ்ந்திருந்தார். நடால், உலகின் முதல் நிலை வீரராக ஓர் ஆண்டை நிறைவு செய்வது இது 4-ஆவது முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.