மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 2-ம் நாள் உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் ஜூலை 16 அன்று தொடங்கியது.
டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வீட்டுக்குச் சென்ற ஆர்ச்சர், 2-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் விளையாடாத ஜோ ரூட், இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார். இங்கிலாந்து அணியில் சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், பிராட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். மே.இ. தீவுகள் அணியில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. சிப்லி 86, ஸ்டோக்ஸ் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று போலவே இன்றும் சிப்லியும் ஸ்டோக்ஸும் திறமையுடன் விளையாடினார்கள். ரன்கள் எடுக்க அவசரப்படாமல் பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தை நன்குப் பயன்படுத்திக் கொண்டார்க்ள். இருவரும் 400 பந்துகளில் 150 ரன்களை எடுத்தார்கள். 102-வது ஓவரில் நிதானமான முறையில் 250 ரன்களை எட்டியது இங்கிலாந்து.
நான்கு பவுண்டரிகள் மட்டும் அடித்து 312 பந்துகளில் சதமடித்தார் சிப்லி.
2-ம் நாள் உணவு இடைவேளையின்போது 108 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. சிப்லி 101, ஸ்டோக்ஸ் 99 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.