பிசிசிஐயின் புதிய ஒப்பந்தத்தில் ரஹானே, இஷாந்த் சர்மா உள்ளிட்ட பிரபல வீரர்களின் பெயர்கள் இடம்பெறாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 21 அன்று பிசிசிஐ கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வீரர்களுக்கான ஒப்பந்தம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. கடந்த வருடம் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெற்ற ரஹானே, இஷாந்த் சர்மா, சஹா ஆகிய பிரபல வீரர்கள், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. ஒப்பந்தத்தில் ஏ+ பிரிவில் உள்ள வீரர்களுக்குத் தலா 7 கோடியும் ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்குத் தலா ரூ. 5 கோடியும் பி பிரிவில் உள்ள வீரர்களுக்குத் தலா ரூ. 3 கோடியும் சி பிரிவு வீரர்களுக்குத் தலா ரூ. 1 கோடியும் வழங்கப்படவுள்ளன.
தற்போது குரூப் சி பிரிவில் உள்ள சூர்யகுமார் யாதவ், பி பிரிவுக்கு நகர்த்தப்படுவார். நெ.1 டி20 பேட்டராக உள்ளதால் ஏ பிரிவில் இடம்பெறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல ஷுப்மன் கில்லும் சி பிரிவிலிருந்து பி பிரிவுக்குப் பதவி உயர்வு பெறவுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்து சாதனை படைத்த இஷான் கிஷனுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. டி20 அணியின் கேப்டன் பதவியைப் பெற்ற பாண்டியா, சி-லிருந்து பி பிரிவுக்குப் பதவி உயர்வு பெறவுள்ளார். இதுகுறித்த முறையான அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.