மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் 9-16 இடங்களுக்கான ஆட்டத்தில் பரபரப்பான முறையில் கனடாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி, நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டது. தற்போது ஸ்பெயினில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்திய மகளிர் அணியை 1-0 என வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதியடைந்தது ஸ்பெயின் அணி.
9-16 இடங்களுக்கான போட்டியில் கனடாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி மோதியது. இரு அணிகளும் இப்போட்டியில் இதுவரை ஒரு வெற்றியும் பெறாததால் முதல் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடின. முதல் பகுதியிலேயே கனடா ஒரு கோலை அடித்தது. எனினும் கடைசிப் பகுதியில் பெனால்டி கார்னர் மூலமாக கோல் அடித்து தோல்வியைத் தவிர்த்தது இந்தியா. கடைசியில் 1-1 என சமனில் இருந்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க ஷூட் அவுட் நடைபெற்றது.
ஷூட் அவுட்டில் கனடா 2-0 என முன்னிலை வகித்தாலும் இந்திய அணி 2-2 என சமன் செய்தது. 14 முறை இரு அணிகளும் முயன்ற பிறகுக் கடைசியாக நேஹா கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். பிறகு கேப்டன் சவிதா, கனடாவின் முயற்சியைத் தடுத்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். இந்திய மகளிர் அணி 3-2 என கனடாவை வீழ்த்தியது. தனது பிறந்த நாளன்று நாட்டுக்கு முக்கியமான வெற்றியை சவிதா அளித்தார். அடுத்ததாக 9-12 இடங்களுக்கான ஆட்டத்தில் ஜப்பானுக்கு எதிராக இந்திய மகளிர் அணி போட்டியிடவுள்ளது. நாளை (ஜூலை 13) இந்திய நேரம் இரவு 8 மணிக்கு ஆட்டம் நடைபெறவுள்ளது.