இந்தியாவின் அனுபவம் வாய்ந்த தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு டி20 உலக கோப்பையில் இடமில்லை என சுனில் கவாஸ்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தவான் ஏற்கனவே 2014, 2016 டி20 உலக கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்த ஐபிஎல் தொடரிலும் நல்ல பார்மில் இருந்துள்ளார்.
தற்போதைய இந்தியா தென்னாப்பிரிக்கா தொடரில் இளம் வீரர்களான ருதுராஜ் -இஷான் கிஷனுக்கு தொடக்க வீரர்களாக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்தியாவிற்கு தொடக்க வீரர்களாக ரோகித், கே.எல். ராகுல் இருக்கும் போது யாருக்கு பிசிசிஐ வாய்ப்பளிக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியாவுக்கு டி20 உலக கோப்பையில் முதல் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் எம்சிஜி மைதானத்தில் அக்டோபர் 23ஆம் நாள் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்ததாவது:
ஷிகர் தாவன் பெயர் பரிசீலனைக்கு வருமா எனத் தெரியவில்லை. அப்படி வந்தால் அது அயர்லாந்து தொடருக்காக இருக்கலாம். ஏராளமான வீரர்கள் இங்கிலாந்து தொடருக்கு சென்றிருப்பதால் அவருக்கு அயர்லாந்து தொடரில் வாய்ப்பளிக்கலாம். ஆனால் டி20 உலக கோப்பை அணியில் இருப்பாரா தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ரோகித் சர்மா-கே.எல்.ராகுல் தான் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும்.