2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சரியாக விளையாடாத மூத்த வீரர்களை அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்யக்கூடாது என முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று மெல்போர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் தோல்வி பற்றி முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது:
இந்திய அணியில் மாற்றம் வரவேண்டும் என விரும்புகிறேன். அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் சிலரை நான் பார்க்க விரும்பவில்லை. 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மூத்த வீரர்கள் விளையாடவில்லை. இளம் வீரர்கள் தேர்வானார்கள். அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுபோன்றதொரு அணியை அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் வெற்றி பெற வேண்டும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் தான் வருங்கால இந்திய வீரர்கள். எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடும்போதுதான் அதற்கேற்ற அணியை அடுத்த இரு வருடங்களில் தேர்வு செய்ய முடியும்.
இம்முறை சரியாக விளையாடாத மூத்த வீரர்களை அடுத்த உலகக் கோப்பையில் பார்க்க நான் விரும்பவில்லை. அதுபோன்றதொரு அணியைத் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்வார்கள் என நம்புகிறேன். அல்லது இதே தேர்வுக்குழுவினர் தான் அடுத்த உலகக் கோப்பைப் போட்டி வரைக்கும் நீடிப்பார்களா? இதே அணியுடன், இதே அணுகுமுறையுடன் அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடினால் இதே முடிவு தான் கிடைக்கும் என்றார்.