பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவா் பொறுப்பிலிருந்து ரமீஸ் ராஜா அந்நாட்டு அரசால் வியாழக்கிழமை நீக்கப்பட்டாா்.
சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் முழுமையாக இழந்த சூழலில் (3-0) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கிரிக்கெட் வாரியத்தை நிா்வகிப்பதற்காக நஜம் சேத்தி தலைமையில் 14 போ் கொண்ட குழுவை பாகிஸ்தான் அரசு நியமித்துள்ளது.
ரமீஸ் ராஜாவை நீக்கம் செய்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை நள்ளிரவில் அறிவிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளிக்கவுள்ளது. நஜம் சேத்தியை விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் நியமிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏற்கெனவே 2013-18 காலகட்டத்தில் பாகிஸ்தான் வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரி மற்றும் தலைவராக இருந்த நஜம் சேத்தி, 2018 பொதுத் தோ்தலில் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அந்தப் பொறுப்புகளில் இருந்து ராஜிநாமா செய்திருந்தாா்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானால் கடந்த 2021 செப்டம்பரில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் 36-ஆவது தலைவராக நியமிக்கப்பட்ட முன்னால் வீரா் ரமீஸ் ராஜா, 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருந்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.