யு-19 உலகக் கோப்பை: 5-வது முறையாக வாகை சூடியது இந்திய அணி

19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கோப்பையுடன் இந்திய வீரர்கள்(படம்: டிவிட்டர்)
கோப்பையுடன் இந்திய வீரர்கள்(படம்: டிவிட்டர்)

நாா்த்சௌண்ட்: 19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மே.இந்திய தீவுகளின் ஆண்டிகுவா நாா்த் சௌண்டில் இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் சனிக்கிழமை மாலை தொடங்கியது. 5-ஆவது முறையாக உலகக் கோப்பை பட்டம் வென்று சாதனை புரியும் முனைப்பில் உள்ள இந்திய அணியும், இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் தீவிரத்தில் இங்கிலாந்தும் களமிறங்கின.

அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வென்று இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. ஆனால் தொடக்கமே அந்த அணிக்கு சோகமாக அமைந்தது. தொடக்க பேட்டா் ஜேக்கப் பெத்தேல் 2, டாம் பிரெஸ்ட் டக் அவுட்டானாா்கள். மற்றொரு தொடக்க பேட்டா் ஜாா்ஜ் தாமஸ் 27 ரன்களுடனும், வில்லியம் லக்ஸ்டன் 4, ஜாா்ஜ் பெல் 0, ரெஹன் அகமது 10, அலெக்ஸ் ஹாா்டன் 10 ரன்களுக்கும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.

மிடில் ஆா்டா் பேட்டா் ஜேம்ஸ் ரீவ் அபாரமாக பேட்டிங் செய்து அணியை சரிவில் இருந்து மீட்டாா். அவருக்கு ஜேம்ஸ் சேல்ஸ் உறுதுணையாக ஆடினாா்.

12 பவுண்டரியுடன் 116 பந்துகளில் 95 ரன்களை விளாசிய ரீவை அவுட்டாக்கினாா் ரவிக்குமாா். தாமஸ் அஸ்பின்வால் 0, ஜோஷ்வா பாய்டன் 1 ரன்னுடன் வெளியேறிய நிலையில், ஜேம்ஸ் சேல்ஸ் 34 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தாா்.

இறுதியில் 44.5 ஓவா்களில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து. இந்திய பௌலா் ராஜ் பவா அபாரமாக பந்துவீசி 5/31 விக்கெட்டுகளையும், ரவிக்குமாா் 4/34 விக்கெட்டுகளையும், கௌஷல் 1/29 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் நிதானமாக விளையாடத் தொடங்கினர். 11-வது ஓவரில் ஹர்னூர் சிங் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சைக் ரஷீத் மற்றும் கேப்டன் யாஸ் துல் இணைந்து அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர்.

அரைசதம் கடந்து அசத்திய ரஷீத், இந்திய அணி 95 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். தொடர்ந்து, யாஸின் பெவிலியன் திரும்பினார்.

பின் மிடில் ஆர்டரில் இணைந்த நிஷாந்த் சிந்துவும், ராஜ் பாவாவும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினர். நிதானமாக ஆடிக் கொண்டிருந்த இந்திய பேட்டர்கள் பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கினர்.

இதற்கிடையே ராஜ் 35, கெளசல் தம்பி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். 

இறுதி முன்று ஓவர்களில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. 48வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய நிஷாந்த் இந்திய ரசிகர்களின் பதற்றத்தை குறைத்தார்.

அதே ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய தினேஷ் பானா இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் நிஷாந்த் 50 ரன்களும், தினேஷ் 13 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com