ஐபிஎல் ஏலத்தில் அதிக வரவேற்பைப் பெற்ற தமிழக வீரர்கள்
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்கள் அதிக எண்ணிக்கையிலும் அதிக தொகைக்கும் தேர்வாகியுள்ளார்கள்.
இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் 30 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். தமிழக அணி இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியை வென்றதோடு விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் 2-ம் இடம் பிடித்தது. இதனால் இந்த வருட ஏலத்தில் தமிழக வீரர்கள் அதிக அளவில் தேர்வாக வாய்ப்புள்ளதாக அறியப்பட்டது.
அதேபோல ஷாருக் கான், சாய் கிஷோர், எம். அஸ்வின் போன்ற சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ஐபிஎல் அணிகள் மிகவும் ஆர்வம் காண்பித்தன. ஏலத்துக்கு முன்பு, தமிழகச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை ரூ. 8 கோடிக்குத் தக்கவைத்துக்கொண்டது கொல்கத்தா அணி. எனவே இந்த வருட ஐபிஎல் போட்டியில் 14 தமிழக வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.
ஐபிஎல் ஏலத்தில் தேர்வான தமிழக வீரர்கள்
1. ஷாருக் கான் (பஞ்சாப்) - ரூ. 9 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) - ரூ. 8.75 கோடி
3. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி) - ரூ. 5.50 கோடி
4. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்) - ரூ. 5 கோடி
5. நடராஜன் (சன்ரைசர்ஸ்) - ரூ. 4 கோடி
6. சாய் கிஷோர் (குஜராத்) - ரூ. 3 கோடி
7. எம். அஸ்வின் (மும்பை) - ரூ. 1.60 கோடி
8. விஜய் சங்கர் (குஜராத்) - ரூ. 1.40 கோடி
9. சஞ்சய் யாதவ் (மும்பை) - ரூ. 50 லட்சம்
10. பாபா இந்திரஜித் (கேகேஆர்) - ரூ. 20 லட்சம்
11. என். ஜெகதீசன் (சிஎஸ்கே) - ரூ. 20 லட்சம்
12. ஹரி நிஷாந்த் (சிஎஸ்கே) - ரூ. 20 லட்சம்
13. சாய் சுதர்சன் (குஜராத்) - ரூ. 20 லட்சம்
ஐபிஎல் ஏலத்தில் அதிக எண்ணிக்கையில் தேர்வான வீரர்களில் தமிழகமும் ஒன்று. தமிழ்நாடு, கர்நாடகா, தில்லி ஆகிய அணிகளிலிருந்து தலா 13 வீரர்கள் ஏலத்தில் தேர்வாகியுள்ளார்கள். ஏலத்தில் அதிகத் தொகை செலவிடப்பட்டது தமிழக வீரர்களுக்குத்தான். ரூ. 39.55 கோடி. அடுத்த இடத்தில் ராஜஸ்தான். 9 வீரர்கள் ரூ. 33.45 கோடிக்குத் தேர்வாகியுள்ளார்கள்.
ஏலத்தில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய அதிக அணிகள் போட்டியிட்ட புள்ளிவிவரத்தில் தமிழகத்தின் சாய் கிஷோரும் உள்ளார். தீபக் ஹூடா, சாய் கிஷோர், டிம் டேவிட் என மூன்று வீரர்களையும் தேர்வு செய்ய அதிகபட்சமாகத் தலா 6 அணிகள் போட்டியிட்டன. சாய் கிஷோர் ரூ. 3 கோடிக்கும் டிம் டேவிட் ரூ. 8.25 கோடிக்கும் தீபக் ஹூடா ரூ. 5.75 கோடிக்கும் தேர்வானார்கள். இவர்களில் சாய் கிஷோரையும் தீபக் ஹூடாவையும் தேர்வு செய்ய சிஎஸ்கே முயன்று பிறகு தொகை அதிகமானதால் போட்டியிலிருந்து விலகியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.